Latest

அட்சய திருதியை வரலாறு - சுவாரசியமான தகவல்

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள்.

அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.



வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன.

அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.
ஐதங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும்.

அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.

விரதம் இருக்கும் முறை

அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும். பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும்.


அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.  அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும்.

அட்சய திருதியையில் நடந்த அற்புதங்கள்

கவுரவர்களுடன் சூதாடியதன் காரணமாக தனது நாடு, சொத்து, தம்பிகள் அனைவரையும் தர்மர் இழந்தார். பின்னர் தனது மனைவி திரவுபதியையும் பந்தயப் பொருளாக வைத்து தோற்றுப்போனார். இதையடுத்து திரவு பதியை சபைக்கு இழுத்து வரச் சொன்ன துரியோதனன், அவளை துகிலுரிக்க உத்தரவிட்டான். அதன்படி துச்சாதனன் துகிலுரிக்க முற்பட்டான். திரவுபதி அபயம் வேண்டி சபையோரிடம் வேண்டினாள். ஆனால் அந்த சபையில் பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்றோர் இருந்தும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் கண்ணனை நினைத்து கைகூப்பி வேண்டினாள். அப்போது கிருஷ்ணர் தன் கையை உயர்த்தி, 'அட்சய' என்றார். அவரது கையில் இருந்து புறப்பட்ட ஆடை, திரவுபதியின் உடலை சுற்றி வளர்ந்து கொண்டே இருந்தது. துச்சாதனன், திரவுபதியின் புடவையை இழுத்து, இழுத்து கைசோர்ந்து மயங்கி விழுந்துவிட்டான். திரவு பதியின் மானத்தை கிருஷ்ண பகவான் காப்பாற்றிய தினம், 'அட்சய திருதியை' ஆகும்.
கிருஷ்ணனின் பால்ய நண்பர் குசேலன். இவர் வறுமையில் வாடிய நிலையில், கிருஷ்ணரை சந்திப்பதற்காகச் சென்றார். அவரை கண்ட மாத்திரத்தில் ஓடோடி வந்து வரவேற்ற கிருஷ்ணர், குசேலர் கொண்டு சென்ற அவலில் ஒருபிடியை எடுத்து வாயில் போட்டு கொண்டு 'அட்சயம்' என உச்சரித்தார். மறுவினாடி குசேலன் வீட்டில் செல்வம் குவிந்தது. குழந்தைகளுக்கு நல்ல உணவு, ஆடைகள், ஆபரணங்கள் கிடைத்தன. குடிசை வீடு, பெரிய பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாள் 'அட்சய திருதியை' தினமாகும்.

நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசத்தின்போது சூரியனை வேண்டி அட்சய பாத்திரம் ஒன்றை பெற்றனர். அந்தப் பாத்திரத்தில் இருந்து உணவைப் பெற்று பாத்திரத்தை கழுவி விட்டால் மீண்டும் உணவு பெற முடியாது. மறுநாள் தான் அதில் இருந்து உணவைப் பெற முடியும். இந்த நிலையில் பாண்டவர்களை துன்புறுத்த துரியோதனன் திட்டமிட்டான். இதற்காக அடிக்கடி கோபம் கொள்ளும் துர்வாச முனிவரை அழைத்து உபசரித்து பணிவிடைகள் செய்தான். அவர் மகிழ்ந்து வேண்டிய வரம் கேட்கச் சொல்ல, 'காட்டில் உள்ள எங்கள் சகோதரர்களான பாண்டவர்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என கேட்டுக்கொண்டான். அவ்வாறே செய்வதாக கூறி துர்வாசர் காட்டிற்கு சென்று பாண்டவர்களை சந்தித்தார். அப்போது பாண்டவர்கள் உணவருந்தி முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டிருந்தனர். இதனால் கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரிடம், 'ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்' எனக் கூறினர். தங்கள் தர்மசங்கடமான நிலையை நினைத்து திரவுபதி, கண்ணனை வேண்டினாள். பகவான் அங்கு தோன்றினார். அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி கூற, அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கீரையும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை பகவான் எடுத்து வாயில் போட்டு வயிற்றை 'அட்சய' எனக்கூறி தடவினார். அந்த நேரத்தில் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவருக்கும், அவரது சீடர்களுக்கும் உணவை உண்ட திருப்தி ஏற்பட்டது. அவர்களால் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் பாண்டவர்கள் இல்லத்திற்கு வராமல் திரும்பி சென்றுவிட்டனர். இவ்வாறு கண்ணன், பாண்டவர்களுக்கு அருள்புரிந்த தினமும் அட்சய திருதியை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.தண்ணீர் தானம் அட்சய திருதியை அன்று தண்ணீர் தானம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது

இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை பாஞ்சாலை நாடு கடும் வறட்சியில் சிக்கித் தவித்தது. அப்போது பூரியசஸ் என்ற மன்னன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று அவனது நாட்டை, எதிரிகள் கைப்பற்றிக் கொண்டனர். மன்னன் எதிரிகளின் கையில் சிக்காமல், தன் மனைவியுடன் காட்டுக்குள் தப்பி ஓடினான். அங்கு சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம், 'என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்?' என்று கேட்டான். பூர்வ ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள் காரணமாக உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே போல் அட்சய திருயை தினத்தில் நீ செய்த தண்ணீர் தானம்தான், உன்னை மன்னராக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் நீ செய்த பாவங்களின் பலனை அனுபவிக்க வேண்டும்' என்றனர். இதையடுத்து அந்த மன்னன் காட்டில் வசித்தபடி, நாராயணரை நினைத்து தியானம் செய்து வந்தான். மேலும் அட்சய திருதியை நாளில்,வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வந்தான். மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். மன்னன் இறைவனிடம், 'சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். அதற்கு இறைவனும் அவன் எண்ணப் படியே வரம் கொடுத்தார். பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை ஆட்சியைக் கைப்பற்றினான். அதன்பிறகு நல்ல முறையில் ஆட்சி செலுத்தினான்.

No comments